Monday, 3 April 2017

அந்தாதி

ஒரு காகம் இலாவகமாக பறந்து வந்து அந்த நாவல் மரத்தின் இடப்பக்கக் கிளையில் அமர்ந்ததை ஜன்னல் வழியாகக் கண்டேன்.

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாக 6.00 மணி காட்டியது.

குளிரான காலைப் பொழுது. நான் படுத்திருந்த அறையில் எந்த மாற்றமும் இல்லை. அதே மஞ்சள் நிற சுவர்கள், கூரையில் சுற்றும் வெள்ளை நிற மின்விசிறி, மரக்கட்டில், கட்டிலில் அதே நான்... 

விடிந்துவிட்டது. அலுவலுக்குச் செல்ல வேண்டும். செல்லாமல் வீட்டிலேயே இருக்க முடியாது. நேரத்தை விரயம் செய்வது தவறு. ஏனென்றால் இன்று, இப்பொழுது மட்டுமே உண்மை. சரிதான், நாளை என்பது சோம்பேரிகளின் சொர்க்கம், இன்று மட்டுமே உழைப்பாளர்கள் மார்க்கம் என நான் மோட்டிவேஷனல் க்வோட் சொல்ல வருவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், என் நிலைமை அப்படியல்ல, இன்று மட்டுமே உண்மை, இன்றின்றி நானில்லை. இதையெல்லாம் ஏன் உங்களிடம் சொல்கிறேன்? சொல்கிறேன்.

கிளம்பி, வீட்டைப் பூட்டிவிட்டு வீதியில் நடந்தேன்.

வீதி. இந்த இடம் எனக்கு அத்துப்படி. எத்தனை முறை பார்த்தாலும் இந்த இடம் மாறுவதில்லை. மாறாது. மாறினால் மிகவும் சந்தோசப்படக்கூடிய ஆள் நான்தான். உதாரணத்திற்கு, வீட்டுப் பக்கம் உள்ள நாவல் மரத்தில் ஒரு காகம் வந்து உட்கார்ந்ததே? அதற்கு அதுதான் உறைவிடம். அங்கு அதற்கொரு கூடும் உண்டு. இன்றும் அது அங்குதான் இருக்கும். நாளையும் அங்குதான். நாளை மறுநாளும்.

இதுமாதிரி ஒரு விஷயத்தை அறுதியிட்டு இது இப்படித்தான் இருக்கும், இது நடக்கும், இது நடக்காது, என்று கூறுவதால் சிலர் என்னை மண்டைக் கணம் பிடித்தவன் என நினைப்பதுண்டு. அதாவது அவர்கள் நினைப்பதாய் நான் நினைப்பதுண்டு. இல்லையில்லை, நிச்சயம் நினைக்கிறார்கள். நினைத்துக்கொண்டே இருக்கிறார்கள். சிலர், நான் இது இப்படித்தான் நடக்கப் போவது எனக் கூறுவதைக் கேட்டு ஏளனம் செய்வதுண்டு. ஆனால் அது அவ்வாறே கணக்கட்சிதத் துல்லியத்தோடு நடப்பதைப் பார்த்து, நான் ஏதோ மந்திரக்காரன் எனக் கூறுபவர்களும் உண்டு. இப்படி என் கால இடக் கணிப்புக் கட்சித மகாசக்தியைப் பார்த்து அசந்துபோய் எனக்கு நானே மாயாவினோத மேன் என மார்வல் காமிக்ஸ் பாணியில் பெயர் சூட்டிக்கொண்டுவிட்டேன். உங்களுக்கு மட்டும்தான் இதை சொல்கிறேன், வேறு யாரிடமும் இதை சொல்ல வேண்டாம்.

இ.எஸ்.பி. என்று இங்க்லீஷில் ஒன்று கூறுவார்கள் – இ.எஸ்.பி. விரிந்தால் - எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன். அதாவது சராசரியாக நம் ஆறறிவிற்கும் மனித ஆற்றலுக்கும் அப்பாற்பட்டு ஏதாவது குணங்கள் மனிதரிடையே தென்பட்டால், அவர்களை எக்ஸ்-மேன் ரேஞ்சிற்கு பில்ட் அப் (உட்டாலக்கடி) குடுத்து, அவர்களை வைத்து தொற்றுக் காணொளிகள் (viral videos) செய்து பணம்பண்ண  நிறைய பேர் திரிவதுண்டு. அப்படிப்பட்ட இ.எஸ்.பி ஆஸம் ஆசாமிகளில் நானும் ஒருவன் என நீங்கள் நினைக்கலாம், நினைக்க நிறைய வாய்ப்புண்டு. அப்படியானால் எனக்கு அசாதாரண ஆற்றல்கள் உள்ளனவா? அதைத்தான் சொல்லப்போகிறேன்...

உண்மையிலேயே எனக்கு காலத்தைக் கணிக்கும் ஆற்றல் உண்டா எனக்கேட்டால், அது சார்பு ரீதியாக சரியென்பேன். ஆனால், என்னுடைய மிகப்பெரிய சக்தியாக நான் நினைப்பது ஒன்றுதான். என்னுடைய சகிப்புத்தன்மை. சலிப்பில்லாமல் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வது, மீண்டும் மீண்டும் என்றால் மீண்டும் மீண்டும். இதை சக்தி என்று சொல்வதைவிட ஒருவிதக் காலத்தின் கட்டாயம் எனக் கொள்ளலாம். நான் வாழ இந்த சலிப்பற்றத் தன்மை இன்றியமையாதது.

இது நிற்க...

இரயிலைப் பிடித்து அலுவலகம் வந்தடைந்தேன். ஹ... அதே ஆஃபீஸ். அதே வேலை. என்னுடைய அலுவலகத்திலேயே திறமையான வேலையாள் நான்தான். ஏனென்றால் என்னிடம்தான் அற்புத சக்தி உள்ளதே!

கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே வேலை செய்தேன், இந்த நாள் எப்போது முடியுமென்று. 

அன்று இந்தியா ஆஸ்திரேலியாவிற்கிடையில் கிரிக்கெட் ஆட்டம் நடந்தது . இந்தியா படு மோசமாக ஆடிக் கொண்டிருந்தது. இப்படியே போனால் தோல்விதான். காஃபிடீரியாவில் இருந்த தொலைக்காட்சி முன் எல்லோரும் சோகமாக மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

நடுவில் புகுந்து, “இந்தியா இன்று ஜெயிக்கிறது” எனக் கத்தினேன்.

எல்லோரும் என் பக்கம் திரும்பி, என்னை வியப்புடன் பார்த்தனர். இன்னும் 40 ரன்கள் வேண்டும், 2 ஓவர்கள்தான், இரண்டு விக்கெட் மட்டுமே கையில் உண்டு. சிலர் என்னைப் பார்த்து சிரித்தனர். சிலர் பாவமாகப் பார்த்தனர்.

அடப்போயா, டசன் பால்ல 40 ரன் எப்டி அடிப்பான்?” என்றார் சொட்டை சேஷு.

“இந்த ஓவர்ல 12 ரன் போப்போது”, என்றேன். “இந்தியா இன்று ஜெயிக்கிறது, 1000 ருபாய் பந்தயம்”.

இப்போது சேஷு நெற்றியில் அடித்துக்கொண்டு , “நீ என்ன லூசா?” என சிரித்தார்.

நாலு பந்து சுற்றினான், ரன்கள் சேர்க்கவில்லை
.
“பந்தயத்துக்கு நான் தயார்”, என இந்தியா தோல்வியுற வேண்டுமென்று, சேஷு ஆர்வமானார்.

“கண்டிப்பா பெட் பண்றீங்களா சேஷு?” என சிரித்தேன்.

“நான் சொன்னா வாக்கு மாறமாட்டேன். இன்னக்கி ஆயிரம் எனக்கு இலாபம்.” என்றார்.

பேட்ஸ்மேன் சுற்றிய வேகத்தில் மட்டையில் பட்டு ஐந்தாவது பந்தில் சிக்சர் போனது.

சேஷுவைப் பார்த்து சிரித்தேன். 

“ஏதோ ஃப்ளூக். இன்னும் 34 ரன் அடிக்கணும் தம்பி”.


நோ பாலில், ஒரு ரன் ஓடி, கடைசி பந்து பவுண்டரிக்கு சீறிப் பாய்ந்தது. 49வது ஓவரில் 12 ரன். இப்போது சேஷு கர்ச்சீப்பால் முகத்தை துடைத்துக்கொள்வது சிரிப்பாக இருந்தது.

இப்போது, லாங் ஆனில் 4 என்றேன். 4 போனது. காபிடீரியாவே கலகலத்தது, சேஷைத்தவிர.

தொடர்ந்து மூன்று  சிக்சர்கள். கடைசி இரு பந்துகளில், ஆறு தேவை. விக்கெட் விழுந்தது. திடீரென ஒரே நிசப்தம்.

“கவலைப்படாதீங்க மக்களே! கடைசி பால் சிக்ஸ் அடிக்கிறான்” என்றேன்.

டீப் மிட் விக்கெட் பவுண்டரியை காவல் காத்துக்கொண்டிருந்த ஃபீல்டரின் கையில் பட்டு எகிறி பந்து சிக்சருக்கு சென்றது. இந்தியா வெற்றி. வெற்றியைக் கொண்டாடுவதை மறந்துவிட்டு எல்லோரும் என்னை வேற்று கிரக மனிதனைப் போல் பார்த்தனர்.

"அன்பிலீவபில். வாட் ஏ மெக்னிஃபிசன்ட் கேம் ஆஃப் கிரிக்கெட் வி ஹேவ் சீன் டுடே..." - இது முன்னால் இருந்து டிவி-யில் கமன்டேட்டர்.

“அடப்பாவி, எப்பிடிடா? இந்தியா ஜெயிச்சத நம்புறதா, இல்ல நீ கெஸ் பண்ணத நம்பறதாண்ணே தெரியலையே! எதோ மாய மந்திரம் மாறில்ல இருக்கு”, என சேஷு நழுவினார்.

“1000 ரூபாய் சேஷு...”

“அட மாசக் கடைசிய்யா! சம்பளம் வந்தன்னையும் தர்றேன். கடைசி ஓவர்ல ஸ்பின்னர் போட்டுட்டான். அதான் இந்தியா ஜெயிச்சிட்டான்.” எனத் தன் காபினை நோக்கி ஓடியே விட்டார்.

முடிவாக அலுவல் நேரம் முடிந்தது.

இரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடையில் ஒரு பலூன் வாங்கிக்கொண்டேன்.

பொதுவாக இரயில் நிலையத்தில் இந்நேரத்திற்கு வரப்போகும் இரயில் மிகக் கூட்டமாக இருக்கும். கண்டிப்பாக கூட்டமாகத்தான் இருக்கும். சரியாக அந்த இரயிலும் 6.30-ற்குத்தான் வரும். அருகில் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். பக்கத்தில் அவள். ஸ்வேதா.

ஸ்வேதா - அவளைப் பார்த்ததும் எனக்குப் பழைய ஞாபங்கள் வந்து கண்கள் நனைந்தன. பழைய ஞாபகம் என்றால் அதாவது புதிய ஞாபகம். புதுசு என்றால் இனி நடக்கப்போகிற... ஷ்ஷ்ஷ்... கொஞ்சம் குழப்பம்தான். ஆனால் எனக்குதான் எதையும் முன்கூட்டியே அறியும் சக்தி உள்ளதே, எனவே இது எனக்குப் புதிதல்ல.

அவள் பெயர் மட்டுமல்ல, அவளைப்பற்றி நிறைய சங்கதிகள் எனக்குத் தெரியும். இதை என் சக்தியைக்கொண்டு, அதாவது நிறைய நேரத்தை செலவு செய்து தெரிந்துகொண்டேன். ஆனால், அவளுக்கு என்னைத் தெரியாது. தெரிந்ததுண்டு, இன்று தெரியாது. குழப்பமடையவேண்டாம், விடியும் முன் உங்களுக்குப் புரிந்துவிடும்.

தன்னுடைய ஃபோனைப் பார்ப்பது, இரயில் வரும் திசையைப் பார்ப்பது. ஏமாற்றமடைவது என ஸ்வேதா இருந்தாள்.

“அஹ்ம், எத்தனை முறை கடிகாரத்தைப் பார்த்தாலும் 6.30-ற்குத்தான் வண்டி வரும்” என்றேன்.

திடீரென நான் பேசியதைக் கேட்டுத் திடுக்கிட்டு, என் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். அந்நியர் ஒருவர் தன்னிடம் பேசியதுகண்டு கண்ணியமாய்ப் புன்னகைத்தாள், பெண்ணிய எச்சரிக்கை உணர்வோடு.

பிறகு சில வினாடிகளை மௌனம் உண்டது. இரயில் வரப்போகும் நேரமானது. 

நான் முன்கூட்டியே சொன்னபடி, இரயில் நல்ல கூட்டம். வெளியே வரப்போகும் பயணிகளின் எண்ணிக்கையை விட உள்ளே செல்ல பலரும் எத்தனித்தனர். இரயில் பழைய பிரயாணிகளை பிரசவிக்க, புதுப் பிரயாணிகள் இரயிலைக் கர்ப்பித்தனர். இந்தக கூட்டத்தில் எப்படிச்செல்வது எனத்தெரியாமல் ஸ்வேதா தவித்துக்கொண்டிருந்தாள்.

“அடுத்த இரயிலில் செல்லலாமே! இன்னும் 5 நிமிடத்தில் வந்துவிடும். கூட்டம் கூட குறைச்சலாக இருக்கும்.” என்றேன்.

“ஆனால் அடுத்த இரயில் வர சராசரியாக எப்போதும் 20 நிமிடங்கள் ஆகுமே! நான் இதிலேயே எப்படியோ போய்க்கொள்கிறேன். நன்றி.” எனக் கிளம்பினாள்.

முன் பின் தெரியாத நான் அவளிடம் பேச்சு குடுப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.

கூட்டமான இரயிலில் ஏற முற்பட்டாள். நான் இருக்கையில் அமர்ந்தவாறே, “அடுத்த இரயில் நிச்சயமாக 5 நிமிடத்தில் வந்துடும், கூட்டம் கூட கம்மியாக. என்னை நம்பலாம் ஸ்வேதா”, என்றேன். 'ஸ்வேதா' என அவள் பெயரை சற்று உரக்கவே சொன்னேன்!

கூட்டத்தில் கரையச்சென்றவள் உள்ளே செல்லாமல் திரும்பி என்னைத் திகிலோடு பார்த்தாள். அவள் இரயிலில் ஏறவில்லை. நீள்வண்டி புறப்பட்டது.
என் பக்கம் வந்து, “என் பேரு உங்களுக்கு எப்படித்தெரியும்?” எனக் கேட்டாள்.

இதுதான் மிகவும் சுவாரஸ்யமான பகுதி.

புன்னகைத்தேன்.

“எனக்கா? அதாவது உங்க பேர் எப்படித்தெரிந்ததுன்னா கேட்டீங்க? ம்ம்ம்... நீங்க நான்கு நிமிடம், அதாவது 240 நொடிகள் தந்தால், அடுத்த வண்டி வருவதற்குள் சொல்லிட்றேன். பயப்பட அவசியமில்லை, உட்காரலாமே?”

“உங்களைப் பார்த்தால்... இதற்கு முன் நாம் சந்திச்சிருக்கமா?. ஏற்கனவே உங்களைப் பார்த்தது போலவே இருக்கு.” என்றாள்.

“ஹா ஹா ஹா ஹா.”

“ஏன் சிரிக்கிறீர்கள்?”

“பொதுவாக இது ஆண்கள் கூறும் பிக் அப் லைன். ஒரு பெண் கூறுவது, விந்தையா இருக்கு.”

“ஹ, சரி. இல்லை நீங்கள் தினமும் இந்த ஸ்டேஷனில்தான் வந்து ஏறுறீங்கன்னு நினைக்கிறேன். அப்போது பார்த்திருப்பேனோ என்னவோ?”

“நிச்சயமாக பார்த்திருப்பீங்க. பார்த்திருந்தாலும் என்னை எவரும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை. அது என் சிறப்பு.”

ரெயில்வே டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 6.31.

“நீங்கள் பேசுவது, எனக்கு விநோதமாகவுள்ளது. அதே கேள்விதான். இருந்தாலும், என் பேர் எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“ஹ்ம்ம். அதாவது... எனக்கொரு சக்தியுண்டு”.

“சக்தியா”, நான் சுயநினைவோடுதான் இருக்கிறேனா என்பதுபோல் பார்த்தாள்.

“ஆம் சக்திதான். நான் கிட்டத்தட்ட ஒரு கடவுள்  என வைத்துக்கொள்ளலாமே!”

“அடுத்த இரயில் வருவதற்குள் உங்க கதையை சொல்லுவீர்களா மிஸ்டர் கடவுள்?”

கண்ணை மூடி நீண்ட பெருமூச்செறிந்தேன். அவள் பக்கம் திரும்பி, “என் கை மேல் உங்கள் கையை வைக்கமுடியுமா?”

“வாட்?”

“பயப்பட வேண்டாம். ஐ ஹேவ் நோ ஈவில் இன்டன்ஷென்ஸ்!”

சற்றுத் தயங்கி என் வலக்கை மேல் தன் இடக்கையை வைத்தாள்.

“என்னுடைய சக்தியைப் பற்றி சொல்லமுடியுமா தெரியவில்லை. ஆனால், காண்பிக்கிறேன். நான் சொல்வதை கூர்ந்து கவனிங்க.

“நம் எதிர் பிளாட்பார்மில் மஞ்சள் சட்டை போட்டுள்ள அந்தப் பெண் இப்போது எழுந்து வந்து, இரயில் வருகிறதா எனப்பார்ப்பாள்? பார்க்கிறாளா?”

“ஆம்... அட இதுதான் உங்க சக்தியா? எல்லோரும் தான் நடை மேடையில் வந்து இரயில் வருதான்னு பார்க்குறாங்க.” என்றாள்.

மெல்லியப் புன்னகையோடு, “அவ்வளவு சுலபமாய் என்னைக் கணிக்க வேண்டாம். இப்போது வெள்ளை சட்டை அணிந்த நபர் ஒருவர் நம்மிடம் வந்து இரயில் எப்போது வரும் எனக் கேட்பாரு பாருங்க?”

நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் பின் பக்கம் ஒருவர் வந்து நின்று, “சார், இரயில் எப்போ வரும்? எனக்கேட்டார் – வெள்ளை சட்டை. “இன்னும் மூன்று நிமிஷத்துல வரும் சார்.” என்றேன்.

நன்றி என்ற செய்கையோடு எங்களைக் கடந்து சென்றார்.

இப்போது அவளுக்குக் கொஞ்சம் திகிலாய் இருந்திருக்க வேண்டும்.
“இது... இதெப்படி...”

“ஷ்ஷ்ஷ். அதோ விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தை கையிலுள்ள பலூன் இப்போ வெடிக்கப் போகிறது.”

‘டப்’ என சத்தம் கேட்டது. பலூன் வெடித்த சோகத்தில் குழந்தை அழுதது.

என் சட்டைப்பையில் இருந்து ஒரு சிவப்பு நிற பலூனை எடுத்து ஊதினேன்.

“எப்.. எப்படி?” எனக் கேட்டாள்.

பலூனை ஊதிக்கொண்டே ‘ஒரு நிமிடம்’ என்பது போல் ஒரு விரலால் அவளுக்கு சைகை காட்டினேன்.

“ஒரு பன்னிரண்டு நொடி’ எனக் கூறிவிட்டு, அந்த இருக்கையிலிருந்து எழுந்து ஓடிச்சென்று நான் ஊதிய பலூனை அந்தக் குழந்தையிடம் குடுத்துவிட்டு ஓடிவந்து நான் இருந்த இடத்தில் அமர்ந்து மீண்டும் அவள் கையைப் பற்றினேன். ஓடி வந்ததில் மூச்சு வாங்கியது.

குழந்தை என்னைப் பார்த்து சிரித்தது.

“இங்க என்ன நடக்குது?”

மிகவும் கூர்மையான விழிப்புணர்வோடு இருக்கும் முகபாவத்தோடு அவளைப் பார்த்து, “ஷ்ஷ்ஷ்... மனிதன் ஒரு முப்பரிமான விலங்கு. அவனால முன்னும் பின்னும், மேலும் கீழும், பக்கவாட்டிலும் செல்ல முடியும். ஆனால் காலம் எனும் நான்காம் பரிமாணத்தில் முன்ன மட்டும் தான் செல்ல முடியும். பின்ன செல்ல முடியாது. இன்று வரை மனிதனால் கால இயந்திரம் கண்டுபிடிக்கப்படாததற்கு இதுதான் காரணம் தெரியுமா?.”

“விளங்கவில்லை.”

“ஹா ஹா ஹா. எல்லாமே விளங்கவேண்டுமென்ற அவசியமில்லை.” அவள் பேந்த பேந்த விழித்தது பார்க்க சிரிப்பாய் இருந்தது.

“நீங்கள் சொல்வதெல்லாம் குழப்பமாக உள்ளது. ஆனா உங்கள பார்த்தா நன்றாக பழகியவர் போன்றும், இங்கு நடப்பதெல்லாம் முன்பே நடந்தவை போன்றும் இருக்கு. அது என்ன சொல்வாங்க? ‘தேஜா வு’ போல!”

சத்தமாக சிரித்தேன். “ஹா ஹா ஹா ஹா ஹா. தேஜா வூ? தேஜ்.. ஹா ஹா ஹா. தேஜா வூ பற்றி பேசவேண்டாம். விட்டு விடுவோமே...” என சொல்லிக்கொண்டே கடிகாரத்தைப் பார்த்தேன். “ஆங்... ஸ்வேதா... ஏழு, ஆறு, ஐந்து...”

“எதற்கு கவுண்ட் டவுன் குடுக்குறீங்க?”

“மூன்று, இரண்டு, இரயில் வரப்போகிறது...”

நடை மேடைக்குள் இரயில் வரும் சத்தம் கேட்டது, மணி 6.35.

“நான் சொன்னது போல் இரயில் வந்ததா?”

“இதென்ன கனவா? நம்பமுடியலையே!. நீங்கள் யார்?”

“கணவில்லை. கண்டிப்பா நான் சொல்வதெல்லாம் உண்மை."

இரயில் வந்து நின்றது.

“எனக்கு மிகவும் திகைப்பாகவும், குழப்பமாகவும் உள்ளது. நீங்க யார்? நான் இரயிலில் ஏறனும். நீங்க வரவில்லையா?”

“நான் இரயில் ஏற வரவில்லை.”

“அப்போ நான் போகட்டுமா? உங்களை நாளை சந்திக்கிறேன். இதே இடத்தில். எனக்கு நேரமாகிறது.”

அவள் செல்லப் போகிறாள் என்பது எனக்கு சோகமாக இருந்தது. “நாளையா?”, இன்னும் அவள் கையைப் பிடித்துக்கொண்டுதான் இருந்தேன்.

“நான், நான் செல்ல வேண்டும்”, என்றாள்.

அவள் கையை நான் விடவில்லை. விட்டால் சென்றுவிடுவாளே!

அவள் கையை அழுத்தி, “சென்று விடாதே, என்னைக் காப்பாற்று!" என்றேன்.

"வாட் ஆர் யு பிலாப்பரிங். என் கைய விடுங்க!", என உரக்கச் சொன்னாள்.

அந்த சத்தத்தைக் கேட்டு நடை மேடையில் நின்ற பலரும் எங்களைப் பார்த்தனர்.

"நான் ஒரு கைதி. என்னைக் காப்பாற்று. ஸ்வேதா, என்ன விட்டுட்டு போகாதே!”, என உணர்ச்சிவயப்பட்டுக் கதறி அழுதேன்.

அவளுக்கு நான் சொல்வதும், ஏன் அழுகிறேன் என்பதும் புரிந்திருக்காது. புரிய வாய்ப்பில்லை. கண்களை விரித்து என்னை ஒருவித பயத்தோடும், வியப்போடும், பரிதாபத்தோடும் அவள் பார்த்த அந்தப் பார்வை என்னுடைய இருதயத்தை ஊசியைப் போல ஊடுருவியது. என்னையறியாமலே என் கைப்பிடி அவள் கையை விட்டு மெல்ல மெல்ல நழுவியது. எனைச் சுற்றிலும் கரும் மேகங்கள் போல சூழ்ந்து அவளுக்கு எனக்கும் ஒரு திரை உருவாகி அவள் முகம் மெல்ல மெல்ல மறைய, அவள் கைமேல் இருந்த என் கைப்பிடியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தேன்.

தவறு செய்துவிட்டேன். நான் ஒரு கைதி என்று யாரிடமும் சொல்லக்கூடாது. அதுதான் சட்டம். மீண்டும் தொடக்கத்திற்கே செல்லப்போகிறேன். இது எனக்கு சற்றும் பிடிக்காதவொன்று. ஓட்டப்பந்தயம் முடியும் வேளையில், இறுதிக்கோடு காணாமல்போய், மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்தால் உங்களுக்குப் பிடிக்குமா?  அதுபோலத்தான் இதுவும். கோபமும், பயமும் கலந்து ஒருவித இம்சையாய் இருந்தது. யாரோ நெஞ்சில் கைவைத்து தண்ணீருக்குள் தள்ளுவது போல இருந்தது, ஆழமாக, மிக ஆழமாக. இருட்டாக இருந்தது. 

நான் ஏன் அங்கு, அப்படி நடந்துகொண்டேன்? உண்மையை சொல்லப்போனால் நான் ஒரு குற்றவாளி. கைதி. உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த உலகத்தில் கைதிகளுக்குத் என்ன தண்டனை என்று?

"நேரச் சிறை!" 

ஆம். சிமுலேஷன், அதாவது மெய் நிகர் அமைப்பிற்குள் ஒரு மனிதனின் சிந்தையைக் கவர்ந்து, அவன் நினைவுகளை ஒரு குறிப்பிட்ட கால நேரத்திற்குள் சிறை வைத்துவிடுவார்கள். சின்ன முப்பரிமான சிறையைப் போல, நான் இருப்பது ஒரு நான்கு பரிமாண நேரச் சிறை. என்ன குற்றம் செய்தேன், எதற்காக இந்த நேரச் சிறைக்குள்ளே இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தேவையில்லாத விஷயம். அதைப்பற்றி சொல்ல எனக்கு இப்போதைக்கு தைரியமில்லை.

பார்க்கப்போனால் ஒரு வகையில் தினமும் செய்த வேலையையே மீண்டும் மீண்டும் செய்து செத்து மடியும் கூட்டம் தானே நம்மில் பலர்! இப்படி நாம் செய்த ஒன்றைத்தான் மீண்டும் மீண்டும் செய்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. இருந்தாலும், நான் அப்படியல்ல என்பது குறைந்தபட்ச நிம்மதி. 

என்னைச்சுற்றி நெருக்கிய கரும் மேகக்கூட்டம் விலகி இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் தெரிய ஆரம்பித்தது. 

வெளிச்சம் கண்களைக் கூசி எழுப்பியபோது, என்னுடைய படுக்கை அறையில் இருந்தேன். 

சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தில் நேரம் சரியாக 6.00 மணி காட்டியது.

ஒரு காகம் லாவகமாக பறந்து வந்து அந்த நாவல் மரத்தின் இடப்பக்கக் கிளையில் அமர்ந்ததை ஜன்னல் வழியாகக் கண்டேன்.

Saturday, 14 May 2016

விளையாட்டு

எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கவேண்டும்?

காலையில் எழும்போது தூக்கக்கலக்கத்தில் சுவற்றில் முட்டி, அதானால் வந்த கோபத்தில் ஆத்திரமாக பல்தேய்க்கப்போய், பிரஷ் ஈறில் மோதி, இதனால் மேலும் ஆத்திரம் அடைந்து காலை சுவரின்மேல் உதைத்துத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என நிரூபித்து... ச்சே.

வாசலில் பாலும் வரவில்லை, பேப்பரும் வரவில்லை. ஆத்திரமாக உள்ளே சென்று கடிகாரத்தைப் பார்த்தேன், மணி 7.00. காலையில் முதலில் சுவரைப் பார்க்கும்போதும் 7 ஆகத்தான் இருந்தது. பாட்டரியின் சாவு. 

அவசரமாக  செல்போனை எடுத்துப் பார்த்ததில், ஹாங்காகித் தொலைத்தது அந்த கம்மி RAM சனியன். ஐநூற்றி அறுவத்து ஆறு முறை ஸ்க்ரீனை தேய்த்து, ‘உன்னால் முடியும்என ஊக்கமளித்தும் வேலை செய்யாததால் அதன் பிறப்பைப்பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டியதும் ரோசம் வந்து 7.50.. காட்டி 'வேலைக்கு சரியான நேரத்திற்கு முடிந்தால் போ பார்க்கலாம்' என நக்கலியது. 

இரயிலை நேரத்தில் பிடிக்க குளிக்கவேண்டிய அவசியமில்லை என்பதால் அவசரமாக பேன்ட் சர்ட் அணிந்துகொண்டு ஸ்டேஷனுக்கு ஓடினேன். இரயில் சரியான நேரத்திற்கு வந்து சென்றது சற்று அமானுஷ்யமாய் இருந்தது. 

அடுத்த இரயில் வர இன்னும் 10 நிமிடங்கள் ஆகும். 10 நிமிடங்களுக்குள்
சுமார் 2500 குழந்தைகள் பிறக்கின்றன, 3600 முறை பூமியை மின்னல் தாக்குகிறது, 1160 பேர் திருமணம் செய்துகொள்கின்றனர், இதையெல்லாம்விட முக்கியம், 10 நிமிடம் தாமதித்தால் சிடுமூஞ்சி சொட்டை பாஸ் ஆஃபீசுக்கு எனக்குமுன்னே வந்துவிடுவார் என்பது பயங்கரமான ஒரு புள்ளிவிவரம்.

ஆடி அசைந்து வந்த இரயிலில் முந்திக்கொண்டு சீட் பிடிக்க அனைவரும் ஓட, பச்சை சட்டை ஒருவர் லாவகமாக தன் கைக்குட்டையை ஜன்னளுக்குள் வீசி சீட் பிடித்தது, அந்தக் கைக்குட்டையை யாரோ ஒருவர் தூக்கி எறிந்துவிட்டு அந்த சீட்டில் உட்கார்ந்ததால் பச்சை சட்டைக்கும் கர்ச்சீப்-உதாசீன புருஷருக்கும் நடந்த சண்டையில் ஏனோ கைதவறி என் சட்டைப் பாக்கெட் கிழிந்தது, கிழிந்த சட்டையை மறைக்க நெஞ்சுவலி வந்தவன் போலோ காதலின் விழுந்தவன் போலோ வலது கையால் இட மார்பை மூடிக்கொண்டு நான் ஆபீஸ் வந்து சேர்ந்ததையெல்லாம் கூறினால் நீங்கள் சிரிக்கலாம், அனுதாபமும் படலாம்.

உள்ளே நுழைந்து லெட்ஜரில் கையெழுத்திட்டுவிட்டு காபின் பக்கம் பூனைபோல் போன எனக்கு காத்திருந்தது ஆஃபீஸ் பாய் ரூபத்தில் வந்த அந்த அழைப்பு.

சார், எம்.டி நீங்க வந்தவுடனே உங்கள அவர வந்து பாக்க சொன்னார்.

எனக்கு இந்த ஆஃபீசில் பிடிக்காதது இரண்டு. முதலாவது  என் மேனேஜிங் டைரக்டர். இரண்டாவதும் முதலாவதுதான். 

பவ்யமாக அவர் அறையின் கதவைத் தள்ளி, "எக்ஸ்யூஸ் மீ சார். மே ஐ....

ம்ம்ம்ம்

40 வயதில், தலையிலிருந்து கீழே விழலாமா வேண்டாமா என நினைக்கும் டையடிக்கபட்ட மயிறும், கடம் போன்ற வயிறும், தூரப்பபார்வைக்காக கண்ணாடி அணிந்துள்ள சிரசும் சேர்த்து ஐந்தடி உருவமாய் கருப்பு (கரும்பச்சையாகக் கூட இருக்கலாம்) கோட்டணிந்து எம்.டி. வீற்றிருந்தார். அறையில் அதிகார வாசனை வீசியது.

குட் மார்ன்....முடிப்பதற்குள்,

மிஸ்டர் கிஷன், யு ஆர் ஃபையர்ட்

ரொம்ப கேவலமான ஜோக்கென்று உதாசீனப்படுத்தியிருப்பேன் வேறு யாராயிருந்தாலும். எம்.டி. யிடம், இந்த எம்.டி. யிடம் கண்டிப்பாகக் கூற முடியாது.

22 டிகிரியில் கண்டிஷன் ஆகியிருந்த காற்றிலும் வந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டு, “சாரி சார், தீடீர்னு என்ன?.....  ஐ வாஸ் லேட் டுடே பட் ஐ ஹேவ் ரீசன்ஸ். என் சட்டையைப் பாருங்கள், காலை இரயிலில்...

ஐ டோன்ட் கேர் எ ஷிட் அபௌட் யூர் ரீசன்ஸ். போர்டு மீட்டிங் நடந்து 60 மணி நேரமாவுது. உன்கிட்ட பினான்சியல் ரிசல்ட்ஸ் காப்பி குடுத்து பேப்பர் விளம்பரத்துக்கு அனுப்ப சொன்னேனே? ஏன் பன்னல? தண்டம் நீயா கட்டப்போற? அட பெனால்டி போனா போதுய்யா. பட் டோன்ட் யு ஹேவ் தி டிசிப்ளின். ஒரு சின்ன வேலைய முடிக்க துப்பில்ல. இது முதல் தடவை கிடையாது. இதுக்கு முன்னரும் ஒரு தரம்.... தினமும் லேட்டா வர்றது. தினம் ஒரு நொண்டி சாக்கு. எதாவது ஒன்னு சொல்லி இதுல லீவு வேற பத்து நாளக்கி ஒரு தரம். 

ஐ யம் டோட்டல்லி ஃபெட் அப் வித் யூர் ஆட்டிட்யூட். வெய்ட்.... கெட் லாஸ்ட். ஜஸ்ட் கெட் லாஸ்ட். ஐ டோன்ட் வான்ட் யு இன்சைட் மை ஆபிஸ்." என்று வாயில் எச்சில் தெறிக்க நூறு டெசிபெல்லில் கோபப்பட்டார்.

அவமானம் வலித்தது.

அவுட்பாக்சில் மெயில் மாட்டிகொண்டுவிட்டது, அதனால் தகவல் அட்வர்டைசிங் ஏஜென்சிக்கு செல்லவில்லை என்று சொல்லேண்டா முண்டம். பேசாமல் இருப்பதைவிட எதாவது பேசி வேலையைத் தக்கவைத்துக்கொள்' என இந்த சம்பவத்தை அவசரகாலமாக பாவித்து மூளை சில மட்டமான யோசனைகளைக் கூறினாலும், இன்ட்ரோவர்ட்களுக்கே உரிய  நாணத்தோடும் நாணயத்தோடும், கடந்த மூன்று நிமிடம்வரை 'என் ஆபீஸ்' என நான் நினைத்துக்கொண்டிருந்த அந்த இடத்திலிருந்து கிளம்பினேன்.

அவசரமாக வந்ததால் காலையில் இராசி பலன் பார்க்கவில்லை. விருச்சிகத்துக்கு இன்னக்கி சந்திராஷ்டமமோ?’ என யோசித்துக்கொண்டே முகமெல்லாம் வேர்த்து, அடுத்து என்ன செய்வது எனத்தெரியாது சாலையில் நடந்துகொண்டிருக்க, கைப்பேசியில் ஒரு குறுஞ்செய்தி, அவளிடமிருந்து. வேலை போனதைச் சொல்லி ஆறுதல் தேடலாம் என நினைத்து, அந்த பரிதாபத்திலும் கொஞ்சம் ஆவலாய் மெஸ்ஸேஜய்ப் படித்தேன். அதை முழுவதும் படித்துக்காட்டினால் நீங்களும் அழுதுவிடக்கூடும். 

ப்ரேக் அப்!!!

நீண்ட செய்தி ஒன்று வேறு யாருக்கோ எழுதுவதுபோல் எழுதி, 'எனை இனி தொடர்புகொள்ள வேண்டாம்'  என முடிந்திருந்தது. எழுத்துப் பிழைகளோடு இருந்தாலும் (என்ன அவசரமோ) அவை சொல்லவந்தது புரிந்தது. இது இன்றைய நாளின் மேலும் ஒரு அடி, எதிர்பாராதபோது வந்தது, எதிர்பார்க்கவே இயலாதது, மிக பலத்த ஒன்று!

சாலையோரம் இருந்த பார்க் ஒன்றில் உட்கார்ந்தேன், அந்நேரத்திலும் அங்கு ஜோடிகள். எவ்வளவு சந்தோஷம் அவர்களிடையில்! இருவருக்கும் வேலையும் இருந்து கல்யாணமும் செய்துகொள்வார்கள் போல! ரஞ்சனி இப்படி செய்வாள் என....

அடச்சே என்ன இது? இப்படிப் பிதற்ற ஆரம்பித்து விட்டேனே. இதற்கெல்லாம் காரணம்? 'பிளடி பிட்ச்', என உடனே வில்லனாக மாறும் மெலோடிரமாட்டிக் ஆசாமியல்ல நான்.  

பார்க்கில் இருந்து கிளம்பி, இந்த நாள் எனக்கு நடந்த கொடுமைகளை நினைத்துக்கொண்டே ரோட்டில் செல்கையில், சிந்தை தடுமாறி  ஒரு பேருந்திற்கும், காருக்கும், ஆட்டோ ரிக்ஷாவிற்கும்,  ஐஸ் வண்டி தாத்தாவிற்கும் நடுவில் மாட்டி,  ஒரு நொடி அனைவரையும் கதிகலங்கவைத்து... 

உயிரோடுதான் இருந்தேன்... 

'சாவுகிராக்கி, தேவடியா மவனே, வேற எங்காவது போய் சாவ வேண்டியது தானேடா!" 
அப்போதுதான் முடிவு செய்தேன்.

வீட்டுக்குள் நிழைந்தபோது, ஏழு மணி காட்டியது கடிகாரம். நல்ல கணம் தாங்கக் கூடிய நீண்ட துண்டை எடுத்து ஃபேனில் மாட்டி, கீழே விழுந்தால் அடிபடும் என எண்ணி பளு தாங்குமா என இழுத்துப் பார்த்துக்கொண்டேன். இப்பொழுது அந்த பச்சை நிற டவல் ஆபரணமாய் என் கழுத்தில். 

வெளியில் எங்கோ வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்என எனக்கேற்றாற்போல் பாடல் ஒலித்தது.

ஒரு நிமிடம் தடுமாறினேன்.

இருந்தாலும், எப்படி ஒரே நாளில் ஒருவன் எழும்போதே சுவரில் மோதிக்கொண்டு, இரயிலைத் தவறவிட்டு, சட்டை கிழிபட்டு, வேலை போய், காதல் தோல்வியடைந்து...... ச்சே...
கீழே ஸ்டூலை உதைத்துத் தொங்கினேன்.

தூக்குப்போட்டு தற்கொலை செய்ய நான் யாருக்கும் பரிதுரைக்க மாட்டேன், ரொம்ப சிரமம். மூளைக்கு செல்லும் இரத்தம், பிராணவாயு தடைப்பட்டு இருவது நொடிகளில் செரிப்ரல் ஹைபோக்ஸியா நேர்ந்து......... இறந்தேன்.

சிரிப்பு சத்தம். கொஞ்ச நஞ்சமல்ல. எக்காள சிரிப்பு சத்தம். அட இது என்ன? இறந்த பிறகு!!!.....

ஆவிகள் போன்ற உருவங்கள் பேசிக்கொண்டன: ஹா ஹா ஹா ஹா. மீண்டுமா?”

ஆம். ஹா ஹா ஹா

அட முட்டாளே! சரி, எத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்தான்?”

“25”

ஃபூ, வெறும் 25 தனா?”

இந்தக் குரல்களெல்லாம், இது என்ன எமலோகமா?

சரி அவனின் நினைவு ரிவர்சரை ஆன் செய். செத்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருப்பான்.

இதோஎனக் கூறி ஒரு உருவம் என்னை விட்டு விலகிச்சென்றது.

தலையில் அருவி நீர் பாய்ந்ததைப் போல இருந்தது. கொஞ்சம் வலித்தது.

ல் லா ம்   நி னை வு க் கு  ந் து. வந்தது.... 

ஐயோ, என்ன ஆனது.  ஸ்டேன்டிங்க்ஸ் என்ன? வென்றுவிட்டேனா?” என்றேன்.

ஸ்டேன்டிங்ஸா? ஹா ஹா ஹா! செத்துப்போயிட்டே!.. அதுவும் சூசைட். இப்போதான் கால்குலேஷன் நடக்குது. சோம்பேறித்தனம், பிரச்சனைகளைக் கையாளுவதில் சொதப்பல், தற்கொலை வேறு. கண்டிப்பா மைனஸ் அறுவது ஆயிருக்கும். ஹா ஹா ஹா.

அடச்சே.

புள்ளிப் பட்டியலைப் பார்த்தேன். 

1. யுக்தா: பாசிடிவ், 55, பலம்
2. கீர்வின்: பாசிடிவ், 43, மிதம்
3. மனிதன்: டெட், ஸ்கோர் கால்குலேட் செய்யப்படுகிறது, இறப்பு.

'அடச்சே! யுக்தா 55 ? போச்சு. போச்சு.. முதல் இடம் கிடைக்காது.'

அறையில் இருந்த மானிட்டர், "மனிதன்: படிநிலை இரண்டு, மொத்த புள்ளிகள் 103. தண்டம் -  தற்கொலைக்கு 40 , பிரச்சனையை எதிர்கொள்ளாததற்கு 30. இறுதி புள்ளிகள்: 33.

ஓ எழுவது பாய்ண்ட்ஸ் போச்சா? அறுவதுதான் போகுமென நினைத்தேன்!என்றான் என் நண்பன்.

நோ நோ நோ.... ச்சே.

சென்ற முறையைவிட இம்முறை நன்றாகவே விளையாடினாய். கடினமான தருணங்களில் உன்னுடைய எதிர்கொள்ளல்கள் அருமை. ஆனால் எப்போது காதல் தோல்வி வந்ததோ, அப்போதே, உன் எனெர்ஜி லெவல்கள் குறைந்துவிட்டன. இந்த வெர்ஷனில் காதல் தோல்வி வரும் இடங்கள், படு அற்புதமாக ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளன. மீள்வது ரொம்பக் கஷ்டம்.

பேசாதே. எல்லாம் உன்னால்தான். நான் தற்கொலை செய்யும்போது நீ எனக்கு ஏன் உதவி செய்யவில்லை?”

ஹா ஹா ஹா, உதவி செய்யவில்லையா? தற்கொலைக்குமுன் அந்த பாடலை ஒலிக்கச் செய்தது யார் என நினைக்கிறாய்?”

மீண்டும் ஒரு லைஃப் போய்விட்டதே என்ற ஆதங்கத்தில் இருந்தேன். 

மீண்டும் விளையாடுகிறேன். இம்முறை கண்டிப்பாக ஜெயிப்பேன்.

க்யூ-ஸி லைவ் கியரை என் மேல் மீண்டும் பொருத்தினேன்.  என்னதான் புது வெர்ஷன் என்றாலும் இதன் அறிமுக உரையை விட்டுத்தள்ளும் செய்யும் வசதி இதில் இல்லையென்பது ஒரு பின்னடைவு. கன்சோல் பேச ஆரம்பித்தது.

"மிக்கடோஸ்-இன் வர்ச்சுவல் கன்சோல் உங்களை வரவேற்கிறது. மல்டிவர்சின் மிகச்சிறந்த வர்ச்சுவல் கேமிங்க் "வாழ்க்கை விளையாட்டு”, வெர்ஷன் மூன்று. வீரர் பெயர்: மனிதன். தற்போதைய நிலை: மூன்றாம் இடம்.

விளையாட்டின் லெவல் 1: குழந்தை. குழந்தையாக இருக்கும் வரை உங்களுக்கு இது ஒரு விளையாட்டு என்பது தெரியும்.

லெவல் 2: இளமை. கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் மெய்நிகர் அமைப்பு உண்மை என நம்பி வாழ்க்கை விளையாட்டில் ஆழ்ந்து போவீர்கள்.

லெவல் 3: முதுமை. முதுமைப் பருவம் மிக முக்கியமானது. விளையாட்டின் மிகக் கடினமான பகுதி இதுதான். உங்களுடைய அனுபவம் என்னும் புள்ளிகளை வைத்து இந்த லெவலில் விளையாடினால் மட்டுமே நீங்கள் வெற்றி பெறலாம்.

நீண்ட நேரம் விளையாடி வெற்றி பெற இந்த வழிமுறைகளை பின்பற்றவும். விளையாட்டில் உங்களின் சக்திகளாக தொடுதல், சுவைத்தல், நுகர்தல், பார்த்தல் மற்றும் கேட்டல் என முறையே ஐந்து புலன்களும் அவைகளை முறையாக ஆக்டிவேட் செய்ய, யோசிப்பதற்கு ஆறாம் அறிவான மனமும் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தையும் சரியாக பயன்படுத்தி உண்மையானது எது என நீங்கள் தீவிரமாக சிந்திக்கும் பட்சத்தில் இந்த வர்ச்சுவல் என்விரான்மென்ட் கலைந்து, ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

மேலும், கேமில் அழுந்தி, பொய், பொறாமை, கோபம், கொலை என நீங்கள் செய்யும் விஷமங்களுக்கு அபராதம் உண்டு.

இந்த விதிமுறைகளை ஆயிரமாவது முறையாகக் கேட்கிறேன்.

இருந்தும் நீ ஒரு தடவை கூட வென்றதில்லையே! ஹா ஹா ஹா

கன்சோல்: விளையாட்டில், மிக மோசமான கட்டங்களை சமாளிக்க உங்களின் வழிகாட்டி நண்பர் உங்களுக்கு உதவுவார். உங்கள் வழிகாட்டியாக நீங்கள் தேர்வு செய்யும் நண்பர்?”

நண்பன் பெயர் கடவுள்’.”

நானேதான்என் பக்கத்தில் நின்ற கடவுள்அவனின் க்யூ-சி கியரை தலையில் பொருத்திக்கொண்டு என் பக்கத்தில் அமர்ந்தான்.

இந்த விளையாட்டில் உங்களின் வழிகாட்டி கடவுள். இனி கடவுள் உங்களுக்கு உதவுவார்.

நன்றாய் உதவுவார். உன் ஸ்பெஷல் அமைப்புகளைப் பயன்படுத்தி உன் பெருமைகளை அந்த மெய்நிகர் அமைப்பில் பரவச் செய்வது உனக்கு கொஞ்சம் அதிகப்படியாக படவில்லையா? வர்ச்சுவல் என்விரான்மென்ட் முழுக்க எங்கு பார்த்தாலும் ஆலயங்கள், பூஜை புனஸ்காரம். யு நார்சிஸ்ட்.

ஹா ஹா ஹா, என்ன செய்வது? பழைய வெர்ஷன்களில் விளையாடி பழகிவிட்டது. ஆனால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இந்த வெர்ஷனில் போட்டியின் கடினத்தன்மை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால், என்னதான் உனக்கு போதித்தாலும், நான் உருவாக்கும் வர்ச்சுவல் அறிவுரைகள் உன்னைவந்து சேர்வது கொஞ்சம் கஷ்டம்தான்.

உனக்கு சுலபமாக இருக்கட்டும் என சில முக்கிய அறிவை நான் மதம் என்ற அமைப்பின் மூலம் வழங்கினால், அதே அமைப்பை ரெப்ளிகட் செய்து தவறான விதிமுறைகளைப் புகுத்தி இந்த கன்சோல் விளையாட்டை மேலும் கடினமாக்குகிறது.

உண்மையைக் கண்டுபிடிப்பதே இந்த விளையாட்டு என்பதால், நிஜம் எது என சிந்திக்கும் திறனை உன்னுள் அதிகரிக்க அறிவியல் என்ற அமைப்பை உருவாக்கினால், ஏற்கனவே நான் அமைத்த மதத்திற்கும்இந்த அறிவியலுக்கும்பேதங்களை ஏற்படுத்தி கேம் குழப்பம் செய்கிறது. உண்மையாகவே இந்த வெர்ஷனின் ப்ரோக்ராமிங் மிக மிக அருமை. டெவலப்பிங் மற்றும் டெஸ்டிங் டீம் பக்ஸ் எதுவும் இல்லாமல் இருக்க நிறைய மெனக்கட்டிருக்கிறார்கள்!

இருவரும் பேசிக்கொண்டே இருப்பது கன்சோலிற்கு பிடிக்கவில்லை என நினைக்கிறேன்; இப்படி கேட்டது:

விளையாட நீங்கள் தயாரா?’

இருவரும்: தயார்

கன்சோல் கவுண்டவுன்களைக் கொடுக்க ஆரம்பித்தது. அறுவது.... ஐம்பத்தி ஒன்பது...

வெர்ஷன் 3ன் விதிமுறைகளை இப்போது நன்றாக படித்துவிட்டேன். இண்டெலிஜென்ஸ் அமைப்பிற்கு முக்கியம் உன் ஸ்பெஷல் பவாரான மனதை சரியாகப் பயன்படுத்துவதுதான். கன்சோல் அறிமுக உரையின்போது சொன்னது 5 புலன்கள் மற்றும் கூடுதலாக மனம் என்கிற 6 சக்திகள்தான். அனால் நீ வெற்றி பெறுவதற்கு அதில் சொல்லாத பவர் ஒன்று உண்டு.

நிஜமாகவா. அது என்ன?”

ஹா..... சொன்னாலும் வர்ச்சுவல் என்விரான்மென்டுக்குள் நுழைந்த பிறகு அது உனக்கு நியாபகம் இருக்கவா போகிறது

இருந்தாலும் சொல்கிறேன். முக்கியமான தருணங்களில் நல்லது கெட்டது. அதாவது, விளையாட்டை ஜெயிக்க தேவையானது தேவையில்லாது எது என உணர்ந்து செயல்படும் புத்தி. விழிப்புணர்வு.

வாவ்... முக்கியமான தருணங்களில் நாம் எடுக்கும் முடிவு. அப்சொலூட்லி. விழிப்புணர்வை எப்படி விளையாடும்போது எனக்கு அனுப்புவாய்?”

கேமில் அதற்கு வழியில்லை. நான் உனக்கு எவ்வளவு உதவினாலும் வெற்றியை உறுதி செய்யும் இந்த க்ரிடிகலான சக்தியைப் பயன்படுத்தும் சுதந்திரம் உனக்கு மட்டுமே உண்டு. உண்மையில் இந்த விளையாட்டின் நோக்கமே அது தான். உன்னுடைய முடிவுகள் உன் கையில்!

வாவ்... பீஸ் ஆஃப் ஆசம் ப்ரோக்ராமிங் கடவுளே!

ஆச்சரியப்பட்டது போதும், கவுண்டவுனைப் பார், இன்னும் சில நொடிகளில் விளையாட்டு ஆரம்பித்துவிடும். வாழத் தயாரா?”

நிச்சயமாக.

மூன்று... இரண்டு.... ஒன்று....

வீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீவீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

மீண்டும் குழந்தையாக பிறந்தேன்...........


Sunday, 1 May 2016

விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

டிசம்பர் 31, கி.பி. 2100

‘உலகமே’ புது  நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி இறக்காத சிலரும், வெயிலின் தாக்கத்திற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட சிலரும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத சிலரும்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் மூலம், ‘எவேகோ’ நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டத்திற்கான ஓர் அனுமதிச்சீட்டுக் கிடைத்ததால் நானும் இரவை நோக்கி ஆர்வமாகக் காத்திருந்தேன்.

ஆறு மணியடித்தது... என் டபுள் ரோட்டார் ஹோவர்காப்டரில் ‘எவேகோ’வை நோக்கிப்பறந்தேன். டிராபிக் அவ்வளவு மோசமில்லை. ஆனால் புத்தாண்டுக் குதூகலத்தில் இளைஞர்கள், தங்களின் காப்டரை 15௦களில் பறக்கவிட்டுப் பலரையும் கதிகலங்கவைத்துக்கொண்டு சென்றனர். சிக்னலில் ஒருவன் என் வண்டியைப்பார்த்து, ‘க்ரெக், இந்த மாடலெல்லாம், ம்யூசியத்தில் மட்டும்தான் பார்க்கலாம் என நினைத்தேன். ஃபண்ணி அவுட்டேட்டட் மெக்!’ என்று தன் பின்னிருக்கையில் அவனை இறுக்கமாகக் கட்டிகொண்டிருந்த பெண்ணிடம் கூறினான். இருவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தது எனக்குக் கடும் கோபத்தை வரவழைத்தது. அனால் நான் பொதுவாக வம்பு சண்டைக்குப் போவதில்லை, வந்த சண்டைக்கும் போவதில்லை என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டேன். சிக்னல் வீழ்ந்து, அவன் வாகனம் வீரிட்டுப் பறந்தது.

கொஞ்ச தூரம் பறந்தேன். பில்லியனில் இருந்த அவனின் ஜி எஃப் சிரித்தது வெகு எரிச்சலாக இருந்தது. அவன் முகரைக்கு அழகான அவள். அந்த சம்பவத்திலிருந்து மீள ஒரு குளிர்பானம் அருந்தலாமா? சமீபத்தில் தென்பட்ட தானியங்கி ஃபுட் & ஏர் வெண்டாரிடம் சென்று, ஒரு ‘ஃபிஸ்’ மற்றும் ‘ஆக்சிஜன்’ ஒன்று... ஆர்டர் செய்தேன்.

இயந்திரம் ‘ஃபிஸ்.. ஒன்று ஆக்சிஜன் ஒன்று’  எனக்கூறி விஸ்ஸ்ஸ் என சத்தமிட்டது.

‘உங்கள் சிட்டிசன் எண்ணைக் கூறவும்.’

‘அ35௦மி319’ எனக்கூறி, என் கண்களை ஸ்கேனருக்குள் காட்ட, மீண்டும் விஸ்ஸ்ஸிட்டு குளிர்பானமும் ஆக்சிஜனும் வெளிவந்தன. இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டேன்.

பொருள் வாங்கியதற்கான எலெக்ட்ரானிக் பில் கைக்கணிணிக்கு அனுப்பப்பட்டதன் அடையாளமாக கையில் கட்டியிருந்த க்யூ-ட்ராக்கர் விறுவிறுத்தது.

‘சிட்விக்’கில் பொருள் வாங்கியதற்கு நன்றி. புத்தாண்டு முன்வாழ்த்துக்கள். மீண்டும் வ...

அதற்கு பதிலளிக்க நேரமில்லாததால் நகர்ந்தேன். கேனைத்திறந்து ஆக்சிஜன் டேங்கிற்குள் புது ஆக்சிஜனை ஏற்றினேன். நுரையீரலுக்கு இதம். ஹா... நிம்மதியான உணர்வு. காப்டரில் உட்கார்ந்துகொண்டு குளிர்பானத்தை ருசித்தபடி ‘எவேகோ’ வந்தடைந்தேன்.

தெருவெங்கும் விழாக்கோலம். சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் புத்தாண்டு பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசாங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட பிரம்மாண்ட வி.ஆர் விளம்பரப் பலகைகளில் பிரதமர் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருந்தார். நடு நடுவே, புத்தாண்டின் போது பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் ஒளி ஒலித்தன.

ஹோட்டலின் 66வது மாடியின் வாசலில் காப்டரை ஒப்படைத்துவிட்டு, நுழைவாயிலில் ஸ்கேனரில் கண்களைக் காண்பித்துவிட்டு உள்ளே சென்றேன். ஒரு ரோபோட் என்னிடம் வந்து, ‘இங்கே காற்று புதுப்பியுள்ளதால் உங்களின் பிராண வாயு செயலியைத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றது. மூக்கிலிருந்து கழட்டி அதனிடம் அளித்தேன். ‘செல்லும்போது நுழைவிடத்தில் செயலி எண்ணைக் கூறி பெற்றுக்கொள்ளவும் எனக்கூறி மறைந்தது.

கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கும் அறையில் நுழைந்தேன். மிகவும் சத்தமாக ஒரு ரோபோட் டி.ஜே. மெட்டாலிக்கா போட்டுக்கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள், ரோபோட்கள் என அனைவரும் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு ‘அல்கோ’வைக் (ஆல்கஹால்) கையில் பற்றிக் கொண்டாட்டத்தில் புகுந்தேன். பண்ணிரண்டு மணிக்குப் பக்கத்தில் செல்ல செல்ல ஆட்டம் களைகட்டியது. பலரும் அன்றாட வாழ்விலிருந்து விடுபட்டு தங்களின் கோபம், துன்பம், ஆடைகள் என அனைத்தையும் தூரப்போட்டுவிட்டு மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒரு பெண், அழகான, கொஞ்சம் அதிகமாகவே, என்னிடம் வந்து: ‘ஹேயோ’...

பொதுவாக என்னிடம் பெண்கள் பேசுவது குறைவு. டேட்டிங் சென்றது கிடையாது. ஏன்? அரசாங்க சேவையான ஆர்-டேட்டிங் எனப்படும் ரோபோட் அழகிகளிடம்?.. இல்லை. பணம் செலவழிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

அவளிடம், என்னசொல்வது எனத் தெரியாமல், ‘ஹேயோ, புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்றேன்.

அவள் ஆடிக்கொண்டே, ‘உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் சென்னையா? என்றாள்’.

‘ஆம். நீங்கள்?’

‘நான் திருச்சி. புத்தாண்டுக்காக இன்று வந்துள்ளேன். சேர்ந்து ஆடலாமா?’

‘தாரளமாக! அவளுடன் சேர்ந்து ஆடினேன். மது, அழகிய மாது, மாலைப் பொழுது - மயங்கக் காரணங்கள் நிறைய இருந்தன.’

புத்தாண்டின் கவுண்டவுன் ஆரம்பித்தது. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று....

‘ஹாய் எவ்ரிபடி, விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர்’ என அருகப்பழயதான ஒரு சினிமாப் பாடல் நியு இயர் வாழ்த்தினது. ஜோடிகள் இடைவெளியில்லாமல் கட்டிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர். பலரும் ஹா ஊ என கத்தி உற்சாகமாக வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.

‘என்ன வழக்கம் இது? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பழைய பாடல்தான் புத்தாண்டு அன்று முதல் பாட்டாக ஒலிக்கவேண்டுமா?’ என்றாள்.

நானும், ‘ஆம் வேற பாட்டுக்கென்ன பஞ்சமா. வருடா வருடம் இதைப்போட்டு இதை ஒரு புது வருடக் குருட்டு சம்பிரதாயம் ஆக்கிவிட்டார்கள். யு நோ வாட்? இது கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமையான பாடல். நாயகன் டூ வீல்டு லேண்ட் ஆட்டோமோட்டிவை ஓட்டிவந்து நியு இயர் வாழ்த்து கூறுவார். ஒரு கண்ணாடித்திரையைக் கூட உடைப்பார். நல்ல தமாஷாக இருக்கும்.’

அவள், ‘ஹா ஹா ஹா. உனக்கு நிறைய விஷயம் தெரிந்திருகிறதே!’ என ஆச்சர்யப்பட்டாள்.

என் கன்னம் சிவந்தது. ‘ஹி ஹி. நன்றி. அந்த ஹீரோ பெயர் கூட... ஹ. கம்... கம்லாவோ?...’

‘பரவாயில்லை விடு. பை தி வே, உன் பெயர் என்ன? கேட்க மறந்துவிட்டேன். நான் ‘கியோ.’’

‘என் பெயர் ஜீத்ரீ’

‘ஜீத்ரீ, எங்காவது வெளியில் செல்லலாமா? இங்கு இருப்பது எனக்குக் கொஞ்சம் அன்னீசியாக உள்ளது.’

நானே எப்படி கேட்பது எனத் தயங்கியிருந்தேன். நன்றி கியோ.

‘கண்டிப்பாக! ஒரே இரைச்சலாக உள்ளது இங்கே. வா...’ அவசரமாக வாயிலில் ஏர் மாஸ்க் எண்ணைக் கூறி, வாங்கி அணிந்துகொண்டேன். வெளியே வந்தோம்.

‘நீ எப்படி வந்தாய்? வாகனம்?’

‘நான் ஏர் பூலிங்கில் வந்தேன் ஜீத்ரீ’

‘நல்லது, என் காப்டரில் செல்லலாம் என்றேன். உன் ஆக்சிஜன் மாஸ்க் எங்கே?’

‘நான் மாஸ்க் போட்டுக்கொள்வதில்லை. இந்த நச்சுத்தன்மையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. புத்தாண்டுக்காக அரசு இன்று அப்சர்பர்களை அதிக நேரம் இயக்குகின்றது. தவிர பல பில்லியன் காலன் ஆக்சிஜனும் இன்று டோமிற்குள் விடப்பட்டுள்ளது. செய்திகள் கேக்கலையா?

‘ஹி ஹி, இல்லை..’.

சீடியூப் சப்ஸ்கிரைப் செய்திருந்ததால் இன்று புத்தாண்டு பற்றி அந்தப் பழைய காணொளி வந்தது. முதலில் ஒரு செய்தி சேனலுக்கும் பதிந்துகொள்ள வேண்டும்!

காப்டரில் பறந்துகொண்டிருந்தோம். எனக்கு உடம்பெல்லாம் ‘ஜிவ்’வென்றிருந்தது. முதன்முறையாக ஒரு பெண்ணோடு தனியாக... அவளின் தேகம் என் பின்புறம் உரசிக்கொண்டிருந்தது. என் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மாற்றப்போபவள் இவள்தானா?

ஒரு தனிமையான உணவு விடுதிக்கு சென்று உணவருந்தினோம். மிகச்சீரான பல்வரிசை, பயோ லூமிநெசன்ட் வெளிச்சத்தில் பக்கத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாகவே இருந்தாள். அவளை இம்ப்ரெஸ் செய்வது இப்போது மிகமுக்கியமாதலால், ஏ ஜோக்ஸ், குட்டிக்கதை, அறிவியல் கட்டுரைகள், காமத்துப்பால் என அனைத்தையும் பிரயோகித்தேன்.

அனைத்திற்கும் பதில் ‘களுக்’ என்ற சிரிப்பு. நிறைய பேசினோம், சிரித்தோம், இடையிடையில் தெரியாமல் படுவதுபோல் அவள் கையைத்தொட்டேன். சாப்பிட்டுவிட்டு காப்டரில் ஏறினோம்.

‘எங்கு செல்லலாம் கியோ?’

‘காப்டரை இறக்கிவிட்டு கொஞ்ச தூரம் நடக்கலாமா?’

‘கண்டிப்பாக’.

தனியாக இருப்பதால், அதுநடக்கும் பட்சத்தில் இந்த இடைஞ்சல் எதற்கென ஆக்சிஜன் மாஸ்கை கழற்றி காப்டரில் வைத்தேன்.

நள்ளிரவு. சற்று நேரம் மெளனமாக நடந்தோம். என்னதான் கார்பன் அப்சர்பர்கள் இரவில் இயங்கினாலும், மூச்சு விடும்போது தொண்டை கரகரத்தது.

ஓரிடத்தில் நின்றோம். ‘ஹ, கியோ!’

‘யெப்?’

மெதுவாக அவள் கைகளைப் பற்றினேன். அவளிடமிருந்து எந்த எதிர்ப்புமில்லை. ஒரு இடத்தில் நின்று அவள் இடையைப்பற்றி என் பக்கம் திருப்பினேன். கிட்டத்தட்ட அவள் இதழ்களிடம் நெருங்கும்போது...

‘ஒரு நிமிஷம் ஜீத்ரீ’.....

கொஞ்சம் அளவுக்கு மீறி போய்விட்டேனா?.. லேசாக வியர்த்தது.
‘அங்கே ஒரு கேமரா உள்ளது. சற்றுதள்ளிப் போகலாமா?’

அப்பாடா!..... கொஞ்சதூரம் நடந்து சற்றே இருளான சந்து ஒன்றினுள் நுழைந்தோம். ஒரு ஆள் ஆட்டோமேட்டன்கள் நடமாட்டமுமில்லை.

அவள் இரு கைகளையும் என் இரு கைகளால் பற்றி... நேரே அவள் வாயைக் கவ்வ... என் கைகளில் பயங்கரமான அழுத்தத்தை உணர்ந்தேன்.

‘கியோ, ஏன் இப்படி என் கைகளை முறுக்குகிறாய்?  ஆஆஆ!?’

திடீரென என் மர்மஸ்தானத்தில் விழுந்த அடியால் நிலைகுலைந்தேன். கீழே மண்டியிட்ட எனக்கு, மண்டையில் ஓங்கி ஒரு அடி. என் வலது கையைப் பிடித்துத் திருகி ஒரு சுவரின்மேல் என் தலையை வைத்து அழுத்தினாள். எனக்கு மயக்கமாய் இருந்தது....

‘உன் சிட்டிசன் நம்பரைச் சொல்.’ அவள் குரலில் அதட்டலோ கோபமோ இல்லை. அதே அன்பான குரல்.

‘கியோ... நீ என்ன செய்கி..?’ பேசி முடிப்பதற்குள் அடி வயிற்றில் ஒரு மரண உதை.

‘நம்பர்?’

‘ஆஆஆ.... அ350மி319.... ஆஆ....’

என் ஒரு கண்ணை பலவந்தமாய் திறந்து கையடக்க ஸ்கேனர் ஒன்றால் அதை ஓத்தி எடுத்தாள். பின் ஒரு உக்ரமான உதை. சாலையோரத்தில் சுருண்டு விழுந்தேன்.

காப்டரின் 'கடகட' சத்தம்போல் கேட்டது. அரைகுறையாக கண் விழித்து தலை நிமிர்ந்து பார்த்தேன்.

‘ஜீத்ரீ, நீ நல்ல பையன். அதிகம் தொந்தரவு கொடுக்கவில்லை. உன் புத்தாண்டு பரிசுக்கு நன்றி. அப்புறம் அந்தப் புத்தாண்டுப் பாட்டில் வரும் ஹீரோவின் பெயர் கம்லா அல்ல. கமலஹாசன். விஷ் யு எ ஹாப்பி நியு இயர்’...  என்னுடைய காப்டரில் பறந்துகொண்டிருந்தாள்.

கையில் டிராக்கர் ‘பீங்க் பீங்க்’: ‘உங்கள் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டீர்கள். ஓவர்டிராஃப்ட் லிமிட்டைத் தாண்டுவது பரிந்துரைக்கப்படுவதன்று.’

வலியில் உடம்பை அசைக்கமுடியவில்லை.

இன்ஸ்யூரன்ஸ் க்லெய்ம் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம். ஆனால் ஆக்சிஜன் மாஸ்க் இல்லையென்றால் சிலமணி நேரத்தில் மரணம்தான்.

தூரத்தில் ஒரு கட்டடத்தின் க்யூ-விளம்பரப்பலகை புத்தாண்டு அன்று கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை ஒலித்துக்கொண்டிருந்தது மெல்லியதாகக் கேட்டது: ‘மக்கள் அனைவரும் பாதுகாப்பாக புத்தாண்டைக் கொண்டாடுமாறு அரசு கேட்டுக்கொள்கிறது. யாருமற்ற இடத்தில் அந்நியர்கள் உதவி கேட்டாலோ அல்லது இன்ஸ்டன்ட் டேட்டிங் செல்லலாம் எனத் தெரியாதவர்கள் அழைத்தாலோ, ஏமாறாதீர்கள். அவை வழிப்பறி செய்யும் ரோக் ரோபாட்டுகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அவசியம்.’